ஞாயிறு, 31 ஜனவரி, 2010

மனித மூளை

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் நிகழும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்),இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.

மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.

மூளையின் படிவளர்ச்சியில், மிக முந்திய சிறிய பாலுட்டியான மூஞ்சூறில் இருந்து மனிதக் குரங்கு வழியாக உயர்நிலை விலங்கினங்களில் ஒன்றான மனிதன் வரை மூளை-உடல் அளவு விகிதம் படிப்படியாக உயர்ந்துள்ளது; இதை மூளைப் பருமனாக்கம் (encephalisation) என்று அழைக்கின்றனர். மனித மூளையில் உள்ள சுமார் 50–100 பில்லியன் (5000-10000 கோடி) நரம்பணுக்களில் (1011), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (1010) புறணிக் கோபுர உயிரணுக்கள் (cortical pyramidal cells) ஆகும். இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (1014) நரம்பிணைப்புகளைப் பயன்படுத்துகின்றன.

மனித மூளை, தடிப்பான மண்டை ஓட்டின் எலும்புகளாலும், மூளை முதுகுத் தண்டுநீர்மம் (cerebrospinal fluid) என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும், குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கிறது. ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களாலும், சேதங்களாலும் தீங்குகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது.



பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் (closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் இரத்தத் தடை (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை தொற்று நோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து உடல் உறுப்புகளை தாக்கக் கூடிய பெரும்பாலான பாக்டிரியா கிருமிகளை, மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்று நோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. இருப்பினும், மூளை பாக்டிரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, எதிர்ப்பொருள் (antibodies) மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே குருதி-மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே காரணம். தீநுண்மம் (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெள்ளை உயிர் அணுக்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், பார்கின்சன் நோய், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கியமானவை. உளவியல் நோய்களான உளச் சோர்வு, தாழ்வு மனப்பான்மை, மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன.

வியாழன், 28 ஜனவரி, 2010

சீன பொருளாதாரம் உயர்வு : இரண்டாம் இடத்தை நெருங்குது

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டில் அதன் வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாக அமைந்துள் ளது. உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,), தற்போது அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை இரண்டாமிடத்திலிருந்து ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி சீனா அதிவேகமாக இரண்டாமிடத்தை நோக்கி வளர்ந்து வருகிறது.


அந்நாட்டின் "தேசிய புள்ளியியல் பீரோ' அமைப்பின் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் சில்லரை வர்த்தகம் 15. 5 சதவீதமாகவும், ஊரக நிரந்தர சொத்து முதலீடு 30. 5 சதவீதமாகவும், தொழிலக உற்பத்தி 11 சதவீதமாகவும், வீட்டு அடமானக் கடன் 48 சதவீதமாகவும் 2009ன் மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள் ளன.மேலும், 2009ன் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதம், இரண்டாவது காலாண்டில் 7.9 சதவீதம், மூன்றாவது காலாண் டில் 9.1 சதவீதம், நான்காவது காலாண்டில் 10.7 சதவீதம் எனப் படிப்படியாக வளர்ச்சி அடைந் துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) 245.5 லட்சம் கோடி ரூபாய் (அமெரிக்க டாலர் மதிப்பில் 4.91 ட்ரில்லியன்).இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.

ஜப்பானின் ஜி.டி.பி., 2009ல் 233 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது. அதன் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதம். இந்நிலையில், உலகப் பொருளாதார வங்கி வெளியிட்டுள்ள "உலகப் பொருளாதார அறிக்கை-2010'ல்,"உலகளாவிய நிலையில் பொருளாதார வளர்ச்சி 2009ல் 2.2 சதவீதமாக உள்ளது. 2010ல் இது 2.7 சதவீதமாகவும், 2011ல் 3.2 சதவீதமாகவும் வளர்ச்சி அடையும். பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப் பாதையில் இருந்தாலும், நிதி நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார மீட்சி மிகக் குறைந்த வேகத்தில் தான் இருக்கிறது' என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

       சீனாவின் நிலை இப்படி இருக்கும்போது நாம் எப்போது இந்நிலையை அடைவது. நம் அரசியல்வாதிகள் அவர்களின் பொருளாதாரத்தை வளர்த்துக்கொண்டு சட்டமன்றமோ, நாடாளமன்றமோ சென்று சண்டை போட்டுக்கொண்டு அவர்களது பிரச்சனையைபற்றி மட்டுமே பேசி செல்கின்றனர். எப்போதாவது மட்டுமே நாட்டைபற்றி பேசுகின்றனர்.
   
    அதுமட்டுமின்றி மாநிலத்தை பிரிப்பது, பஸ்சை மறிப்பது பற்றியே பேசுகின்றனர். நாட்டை, மக்களை உயர்த்த பாடுபடும் அரசியல் வாதிகளோ மிகவும் குறைவு.

இந்தியாவின் GDP 2004 ல் 8.30 %  மாற்றம் 93.02 %

2009 ல் 7.40 %  மாற்றம் -17.78 %



 



திங்கள், 25 ஜனவரி, 2010

ஆளில்லா வானூர்தி (Unmanned Aerial Vehicle)

மனிதர்களின் கட்டுப்பாடற்றுத் தன்னியக்கமாகவோ அல்லது மனிதர்களின் தொலைக்கட்டுப்பாட்டின் மூலமாகவோ இயங்கும் வானூர்திகளே ஆளில்லா வானூர்திகள் (Unmanned Aerial Vehicles) என்றழைக்கப்படுகின்றன.
பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமே இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு செலுத்தி வாகனம் (Remotely Piloted Vehicle) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகையான வானூர்திகள் இராணுவப் பயன்பாட்டிலேயே பெருமளவிற் காணப்படுகினறன. இவை தாரை (jet) அல்லது தாட்பாழ் (piston) இயந்திரத்தின் மூலம் இயங்குகினறன.
பொதுவாக இவ்வகை வானூர்திகள் அவற்றின் வடிவமைப்பு, அளவு, கட்டமைப்பு மற்றும் குணவியல்புகளிற்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்பகாலங்களிலிருந்து ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமாகவே இயக்கப்பட்டுவந்த போதிலும், நவீன ஆளில்லா வானூர்திகள் தன்னியக்க கட்டுப்பாட்டுக் கருவிகளையும் கொண்டுள்ளன. இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு மூலமாகவோ அல்லது முற்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்திற்கேற்ப தன்னியக்கமாகவோ இயக்கப்படுகின்றது.
நவீன இராணுவப் பயன்பாட்டிலுள்ள ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்புப் பணி மட்டுமல்லாது தாக்குதல் நடாத்தும் திறன்வாய்ந்தவையாகவும் காணப்படுகின்றன. இவைதவிர இராணுவப் பயன்பாடற்ற செயற்பாடுகளான தீயணைப்பு, பொதுப் பாதுகாப்புச் சேவையினரின் கண்காணிப்புப் பணி போன்றவற்றிலும் ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆளில்லா வானூர்திகள் அவற்றின் பயன்பாட்டுரீதியாக ஆறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
1. எதிரிப் படைகளின் தரை இலக்குக்களைத் தாக்கியழித்தல் (aerial attack)
2. சமர்க்கள அவதானிப்புப் பணி (reconnaissance)
3. வான் யுத்தம் (dog fight)
4. வான்வழி இராணுவப் போக்குவரத்து
5. ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணி (research and development)
6. பொது மற்றும் வர்த்தகப் பணி (civil and commercial purpose)

இவ் ஆறு வகையான ஆளில்லா வானூர்திகளும் அவற்றின் பறப்பு வீச்செல்லை (range), பறப்பு உயரம் (altitude) போன்றவற்றின் அடிப்படையிலும் இவ்வகை வானூர்திகள் வகைப்படுத்தப்படுகின்றன. அமெரிக்க இராணுவம் பல்வேறுபட்ட ஆளில்லா வானூர்தித் தொகுதியமைப்பாகப் (unmanned aircraft system) பயன்படுத்திவருகின்றது. இவ்வகையான தொகுதிகளிலுள்ள வானூர்திகள் இணைக்கப்பட்ட வலையமைப்பினூடு இணைந்து செயற்படுவதுடன் தரையிலுள்ள துருப்புக்களுடன் தொடர்பைப் பேணி தகவல்களை வழங்குகின்றன. இவ்வகையான ஆளில்லா வானூர்தித் தொகுதிகளின் வலையமைப்பு Tier என்ற சொற்பதத்தினாற் குறிக்கப்படுகின்றது. இராணுவத் திட்டமிடலாளர்கள் தனித்துச் செயற்படும் வானூர்திகளை இவ் வலையமைப்பில் தொழிற்படும் வானூர்திகளிலிருந்து பிரித்தறிய இச் சொற்பதத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆளில்லா வானூர்தி தொகுதி வலையமைப்பானது பல்வேறுபட்ட வகையான ஆளில்லா வானூர்திகளைக் கொண்டிருக்கும். அகெரிக்க வான்படை மற்றும் அமெரிக்கக் கடற்படை ஆகியன தமக்கெனத் தனித்தனியான ஆளில்லா வானூர்தித் தொகுதியமைப்பைக் கொண்டுள்ளன. இவ்விரு தொகுதியமைப்புக்களும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றித் தனித்தனியாகவே இயக்கப்படுகின்றன.
ஆளில்லா வானூர்திகள் பல்வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவையாகக் காணப்பட்ட போதிலும், அவற்றின் பொதுவானதும் பெரும்பாலானதுமான பயன்பாடு ஏதோவொரு வகையான அவதானிப்புப் பணியாகவே காணப்படுகின்றது. போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் பயன்பாட்டில் ஆளில்லா வானூர்திகள் மிகக்குறைந்தளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன.
அவதானிப்புப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் இவ்வகை வானூர்திகள் இராணுவம்சார் அவதானிப்பு நடவடிக்கை, தாவர மற்றும் விலங்குகளின் அவதானிப்பு, கடல்சார் அவதானிப்புப்பணி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையான பயன்பாட்டிற்காக கட்புல ஒளிப்படக்கருவி (visual light camera), அகச்சிவப்புக்கதிர் ஒளிப்படக்கருவி (infrared camera) மற்றும் ரேடார் அவதானிப்புக் கருவி போன்றன பயன்படுத்தப்படுகின்றன. வேறுசில சிறப்புப் பயன்பாட்டிற்காக நுண்ணலை உணரி (microwave sensor) மற்றும் புறஊதாக்கதிர் உணரி (ultraviolet sensor) போன்றனவும் பயன்படுத்தப்படுகின்றன. இவைதவிர வளியிற் காணப்படும் நுண்ணுயிர்கள் (microorganism) மற்றும் இராசயணப் பொருட்கள் போன்றவற்றை அவதானிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இவ்வகை வானூர்திகள் உயிரி உணரி (biological sensor) மற்றும் இரசாயண உணரி (chemical sensors) போன்றவற்றைப் பயன்படுத்துகினறன.
தற்காலப் பயன்பாட்டிலிருக்கும் கண்காணிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆளில்லா வானூர்திகள் அதிலுள்ள கருவிகள் மூலம் அவதானிக்கும் காட்சிகளை உடனுக்குடன் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைத்தொடர்புக் கருவிகள் மூலம் அனுப்பிக்கொண்டிருக்கும். இதன்காரணமாக இவ்வானூர்திகள் எதிரிப்படைகளாற் சுட்டுவீழ்த்தப்பட்டாலும் அவதானிப்பின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் தொலைவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் ஆரம்பகாலங்களிற் பயன்படுத்தப்பட்ட இவ்வகை ஆளில்ல அவதானிப்பு வானூர்திகள் அவதானிக்கும் காட்சிகளையும் தரவுகளையும் அதனுள்ளிருக்கும் பதிவுக்கருவியிற் பதிந்து வைத்துக்கொள்ளும். வானூர்தி தளம் திரும்பியதும் அதனுள்ளிருக்கும் கருவியிற் பதியப்பட்டிருக்கும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
மனிதர்கள் செல்வதற்கு ஆபத்தானவையாகக் காணப்படும் இடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளில் இவ்வகை வானூர்திகளின் பயன்பாடு மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது. நவீன இராணுவங்களின் பயன்பாட்டில் ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி தாக்குதல் நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை வானூர்திகள் தரையிலுள்ள பாரிய எதிரித்தளங்களைத் தாக்கியளித்தற் செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி தனிமனித இலக்குக்களை அழிக்கும் செயற்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றன

சனி, 23 ஜனவரி, 2010

சாப்பிட்டுக்கொண்டே படிப்பது கண்ளுக்கு ஆரோக்கியமா ?

நிச்சயமாக ஆரோக்கியம் அல்ல!"  "அதுமட்டுமல்ல... இந்தப் பழக்கவழக்கங்கள் எல்லாம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்ல, பெரும்பாலும் பள்ளி/கல்லூரி மாணவர்கள்தான் படுத்துக்கொண்டே படிப்பது, சாப்பிட்டுக்கொண்டே படிப்பது என்று ஈடுபடுகிறார்கள்.

அந்த வயதுக்காரர்களுக்குத்தான் கண் பார்வை தெளிவாக சீராக இருக்கும். அவர்களால் எப்படியும் படிக்கமுடியும்... பார்க்கமுடியும். இது டீன் ஏஜ்காரர்களுக்கு இயற்கை அளித்த வரம். ஆனால், குப்புறப் படுத்துக்கொண்டும் மல்லாந்து படுத்துக்கொண்டும் படிப்பதால் கண்களுக்கு அயர்ச்சி ஏற்பட்டு, தூக்கம் கண்களை முட்டும். அப்போது கண்கள் அசாதாரண நிலையில் இருக்கிறது என்பதை உணரவேண்டும். தொடர்ந்து அதே வழக்கத்தை அவர்கள் பின்பற்றினார்கள் என்றால், கண்களில் ஈரப்பதன் குறைந்து DRY EYES என்ற நிலை ஏற்படும். கண் சோர்வடைதல், தலைவலி முதலான பிரச்னைகள் ஆரம்பமாகும். பிற்காலத்தில் கண்ணாடி இல்லாமல் எந்த எழுத்தையும் படிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

படுத்துக்கொண்டே படிப்பதால், உடல் ஆரோக்கியம் குறையும் வாய்ப்பு உள்ளது. கழுத்து வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த மாற்றம் உடனே தெரியாது. போகப் போக பார்வையில் கோளாறு ஏற்பட்டு, நாற்பது வயதுக்குப் பிறகு, கண்ணாடியின் துணையின்றி இயங்கமுடியாத நிலைக்கு பாதிப்பு அடைவார்கள்.

அதேமாதிரி, பொழுதுபோக வேண்டுமே என்று சிலர் பஸ், ஆட்டோ, ரயில் பயணத்தின்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் வைத்திருக்கிறார்கள். அப்படிப் படிக்கும் சூழ்நிலையில் சீரான வெளிச்சமும் இருக்காது. பிரயாணக் குலுக்கலால் புத்தகத்துக்கும் கண்களுக்கும் தேவையான இடைவெளியை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. எழுத்துகள் ஒன்றன்மேல் ஒன்று விழுந்து, விழித்திரையிலும் அந்த எழுத்துகள் அலைபாய்ந்து, ஒரே இடத்தில் குவியாமல் காட்சிப்பிழை ஏற்பட்டு, மூளை தடுமாற்றம் அடையும்.

அதையும் மீறி வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, விரைவில் பார்வைத் தடுமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.பயணத்தின்போது படிக்கிறவர்களுக்கு தலைவலி, கழுத்துவலி, வயிற்றைப் பிறட்டுதல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். அப்போது, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று தகுந்த சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

சில குழந்தைகள் டி.வி. பார்த்துக்கொண்டே படிப்பார்கள்; சாப்பிட்டுக்கொண்டே படிப்பார்கள். இளைய வயதினரும் இந்தப் பழக்கத்துக்கு விதிவிலக்கு அல்ல. அப்படிப் படிப்பவர்கள் இருபத்து ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.

இப்படி 'வாயில் சாப்பாடு, கையில் புத்தகம்' தவறான பழக்கம் என்று பெரியவர்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். இல்லையென்றால் பின்னால் நிகழப்போகும் இடர்ப்பாடுகளை சந்திக்கப்போவது பெற்றோர்கள் இல்லை; பிள்ளைகள்தான்! இந்தப் பழக்கம் உள்ளவர்களுக்கு, நாற்பது வயதைக் கடக்கும்போது, மெதுவாக கவனச் சிதைவு ஏற்பட்டு, பார்வைத் தெளிவு இழந்து 'ரீடிங் கிளாஸ்' போடவேண்டிய கட்டாயம் ஏற்படும்! தொடர்ந்து புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள், சீரான வெளிச்சத்தில் படிக்கவேண்டும். டியூப் லைட் வெளிச்சமே போதுமானது.

அந்த வெளிச்சம் நமக்கு இடது புறத்திலிருந்து வருவது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அது ஆரோக்கியமான வாசிப்புக்கும், சீரான கண்பார்வைக்கும் நல்லது. நீண்டநேரம் படிப்பவர்கள் 'டேபிள் லைட்' உபயோகிப்பது சரியாக இருக்கும். ஜன்னல் வழியாக வரும் சூரிய வெளிச்சத்தோடு, மின் விளக்கையும் எரியவிட்டு புத்தகத்தின் மேல் தேவைக்கு அதிகப்படியான ஒளியையும் உண்டாக்குவது கூடாது. வயது கூடக்கூட கண்ணுக்குத் தேவையான வெளிச்சத்தில்தான் படிக்க வேண்டும். காலை

அல்லது மாலை நேர சூரிய வெளிச்சத்தில் வாசிப்பது கண்களுக்கு ஆரோக்கியம். கண்களில் ஈரப்பதன் குறைந்து வறட்சி ஏற்படும் சமயங்களில் கண் மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் சரியாக நிகழும்பட்சத்திலும்கூட உணவு முறைகளில் சத்தான காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டால்தான் சிறுசிறு

பார்வைக் குறைகளையும் தவிர்க்க முடியும். நாள்தோறும் நாம் சாப்பிடுகின்ற உணவில், ஐந்து நிறங்களில் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட், கீரை, மீன், பால், முட்டை, பப்பாளி போன்ற A வைட்டமின் சத்துள்ள உணவுப் பொருட்கள் கண் பார்வைக்கு நல்லது. இந்த உணவுமுறையைக் கடைபிடித்து வந்தால் 'கற்றல் அறிவு'க்குச் சுவைகூடும்!"

புதன், 20 ஜனவரி, 2010

பணம் சம்பாதிக்க செயற்கை பிரசவத்தை உருவாக்கும் டாக்டர்கள்

உலகம் முழுவதிலும் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் ஆசிய நாடுகளில் செயற்கை பிரசவம் (சிசேரியன்) அதிகரித்திருப்பது தெரியவந்தது.
2007-2008-ம் ஆண்டுகளில் மட்டும் சிசேரியன் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக டெல்லி, மும்பை, அகமதாபாத் நகரங்களில் சிசேரியன் எண்ணிக்கை 65 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இதற்கு உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் மெட்டின் கில்ம ஜோக்லு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ஆசியாவைச் சேர்ந்த இந்தியா- சீனா போன்ற நாடுகளில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பெரும்பாலான தனியார் டாக்டர்கள் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் தேவையே இல்லாமல் சிசேரியன் செய்து விடுகிறார்கள். சிசேரியனை விட சுகப்பிரசவம்தான் நல்லது.

சுகப்பிரசவத்தை விட சிசேரியன் மூலம் கூடுதலாக ரூ. 20 ஆயிரம் கிடைக்கிறது என்பதால், அதை ஆதரிக்கிறார்கள். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிசேரியன் ஆபரேசன் செய்யும் தாய்- குழந்தைக்கு நிறைய பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. சில தாய்மார்களுக்கு கருப்பையை அகற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது. டாக்டர்கள் பலர் பண ஆசையில் தங்களது மனசாட்சியை அடகு வைத்து விடுகிறார்கள். மனிதாபிமானம் மிகுந்த டாக்டர்கள் யாரும் தேவையே இல்லாமல் சிசேரியன் செய்யமாட்டார்கள்.
சில பெண்களுக்குதான் பிரசவ நேரம் காலதாமதமானால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும். ஆப்போது சிசேரியன் செய்வதை தவிர வேறு வழியில்லை.
சுகப்பிரசவம் ஆகக்கூடிய நிலையில் உள்ள பெண்களுக்கும் சிசேரியன் செய்து குழந்தையை எடுப்பதுதான் வேதனைப்படக்கூடிய, கண்டிக்கத்தக்க ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

Final Sence

Finelsence.com உங்கள் பிளாக்குக்கான சூப்பர் Templates அதுவும் இலவசமாக

 http://www.finalsense.com/services/blog_templates/index.htm 

என்ற முகவரியில் நூற்றுக்கணக்கான Templates இலவசமாக கிடைக்கிறது.

இங்கு உங்அளுக்கு தேவையான டெம்ப்லேட்டுகளை தேர்வு செய்து More Details என்ற பட்டனை அலுத்தவும் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் Code -ஐ காப்பி செய்து
உங்கள் பிளாக்கில் Templates>Edit Html ஏற்கனவே உள்ள கோடை அழித்துவிட்டு  finalsense.com ல் உள்ள கோடை Copy செய்து Paste செய்து Save Tempalte என்ற பட்டனை அழுத்தி சேமித்து உங்கள் பிளாக்கை புதுமையாக்கலாம்.

சனி, 2 ஜனவரி, 2010

வாழ்த்துக்கள்

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எல்லோக்கும் எல்லாமே இன்பமயமாய்
இருக்கவேண்டும்

தமிழ் மொழியே எங்கெங்கும் சிறக்கவேண்டும்